இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சி, ஐடி துறையில் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அச்சம் நிலவும் இந்தச் சூழலில், ஏஐ-யால் ஒருபோதும் மாற்ற முடியாத 10 முக்கியப் பணிகளை சோஹோ (Zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்.
வருமானத்தை விட சுயமரியாதை முக்கியம்
சமூக வலைதளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “நாம் ஈட்டும் பொருளாதார மதிப்பை (சம்பளத்தை), நமது சுயமதிப்போடு (Self-worth) இணைத்துப் பார்ப்பது ஏஐ காலத்தில் பெரிய நெருக்கடியை உருவாக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளைத் தாண்டி, மனித உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த பணிகளுக்கே எதிர்காலம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடும் அந்த 10 ‘பாதுகாப்பான’ பணிகள்:
அதிக சம்பளம் தராவிட்டாலும், ஏஐ-யால் அச்சுறுத்த முடியாத பணிகளாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்:
- குழந்தை பராமரிப்பு: இயந்திரங்களால் வழங்க முடியாத தாய்மை கலந்த அரவணைப்பு.
- ஆசிரியர் பணி: குழந்தைகளுக்குப் பாடம் போதிப்பதுடன், ஒழுக்கத்தையும் கற்றுத்தருதல்.
- முதியோர் பராமரிப்பு: முதியோர்களுக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆதரவு.
- விவசாயம்: பெருநிறுவன வேலைகளைத் துறந்து மண்ணை நேசித்து விவசாயத்திற்குத் திரும்புவது.
- வனக்காப்பாளர்கள்: இயற்கையை நேசித்து காடுகளைப் பாதுகாக்கும் பணி.
- கோயில் பூசாரிகள்: வருமானம் நோக்கியல்லாமல், தினசரி சடங்குகளை அர்ப்பணிப்புடன் செய்வது.
- இசைக்கலைஞர்கள்: சிறிய அளவிலான ரசிகர்கள் இருந்தாலும், தினசரி பயிற்சி செய்து கலைக்காக வாழ்வது.
- சமூக சேவை: லாப நோக்கம் அற்ற மனிதநேயப் பணிகள்.
- உள்ளூர் கைவினைஞர்கள்: இயந்திரத் தயாரிப்புகளைத் தாண்டிய தனித்துவமான கலைப் படைப்புகள்.
- இயற்கையோடு இணைந்த வாழ்வியல்: சூழலியல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகள்.
ஏஐ-யால் ஏன் மாற்ற முடியாது?
“இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏஐ-யால் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில், இவை பணத்தால் அளக்க முடியாத மதிப்பு கொண்டவை; மனித இயல்போடு பின்னிப்பிணைந்தவை” என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்துகிறார். எதிர்காலத்தில் மனிதகுலம் இத்தகைய செயல்பாடுகளை மையமாகக் கொண்டே தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது கணிப்பு.
ஏற்கெனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த ஸ்ரீதர் வேம்புவின் இந்த புதிய பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பயனர்கள் பலர் ஆதரவாகவும், சிலர் தற்போதைய பொருளாதாரச் சூழலில் இது சாத்தியமா என்ற ரீதியிலும் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



