தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 91,500 ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜக்காபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரை ஓட்டி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கிஷோர் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வைத்திருந்த ரூ. 91,500 பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர் மற்றும் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரிகளின் முன்னிலையில் சரிபார்க்கப்பட்ட அந்தப் பணம், பின்னர் பாதுகாப்பாக அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு செல்வதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.



