வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி கருக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 80). இவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
பழனியம்மாள் வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக வீட்டிலேயே இருந்து கொண்டு உடல் வலியால் கத்திக் கொண்டே இருப்பாராம்.
பக்கத்து வீட்டில் வசித்து வரும் இரண்டு மகள்கள் அவரைப் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு வழக்கம்போல வீட்டிற்குச் சென்ற மகன், பூக்கட்டும் தொழிலாளியான கணேசன் (வயது 40), தனது தாயார் பழனியம்மாள் கத்திக் கொண்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் பழனியம்மாளின் கழுத்தை துடிதுடிக்க அறுத்துள்ளார்.
இதில் சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் உயிரிழந்தார்.
உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாபுதம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற தாயையே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.