கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் அனைவரும் வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திட, மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெறப்போகும் வெற்றியை, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் கரங்களில் ஒப்படைத்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
அதற்கு அச்சாரமாக, தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகளில் கழகத்தினர் தம்மை முழுநேரமும் ஈடுபடுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து தகுதியான வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்திட வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர் குறித்த தகவல்களை உடனடியாக மாவட்டக் கழக அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மக்கள் பணியே மகேசன் பணி எனும் கோட்பாட்டினை மனதில் ஏந்தி, மக்களின் வாக்குரிமை காக்கும் பணிகள், இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களை காக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் தங்களை முழுநேரமும் ஈடுபடுத்தி உழைத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கவனச் சிதறல்கள் ஏதுமின்றி, காலம் பொன் போன்றது என்பதனை மனதில் கொண்டு தேவையற்ற செயல்களுக்கு சமூக வலைத்தளங்களில் நேரத்தினை விரயம் செய்திடாமல், இருக்கின்ற குறுகிய காலத்தில் நமது இலக்கினை நோக்கி உழைப்பினை செலுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மக்கள் பணியாற்றிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



