பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அதேபோல் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தேசிய நலனை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விதிவிலக்கு தேவைப்பட்டால், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூச்சாண்டி காட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்த நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை என்பது போல் காட்டிக் கொள்ளவும், உள்நாட்டு மக்களை திருப்தி அடைய வைப்பதற்காகவும் இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது அந்நாட்டு ராணுவம். இதன் மூலமாக இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்டுகிறதாம்!
இப்படி பயந்துபோய் இருக்கும் பாகிஸ்தான் நேற்று ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. 450 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பின் ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.