அரியலூர் மாவட்டம் குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கோல் ராஜ் – திலகா தம்பதியினர், வேலை நிமித்தமாக தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். செங்கோல் ராஜ் டிரைவராகவும், திலகா பஞ்சாலையில் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களின் 14 வயது மகன் ரென்ஸோ, தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், செங்கோல் ராஜ் வேலை காரணமாக கோவாவுக்கு சென்றிருந்தார். திலகா கடந்த 22ஆம் தேதி காலை முதல் ஷிப்டில் பணிக்கு சென்றார். பின்னர் பஞ்சாலை நிர்வாகம் கேட்டதன் பேரில் இரண்டாவது ஷிப்டையும் தொடர்ந்து வேலை செய்தார்.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய திலகா, கதவைத் தட்டியபோதும் திறக்காததால் சந்தேகமடைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மகன் ரென்ஸோ சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவன் ரென்ஸோ கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மனநல ஆலோசனைக்கான குறிப்பு:
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையில் எத்தகைய பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு, மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால் கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
தமிழக அரசின் உதவி எண்: 104
சினேகா அமைப்பு: 044-24640050



