திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அணைப்பட்டி சாலையில் யூனியன் அலுவலகம் அருகே கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4,68,000 பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.



